செய்திகள்

சோழிங்கநல்லூர் பெண் என்ஜினீயரை தாக்கிய 3 கொள்ளையர்கள் கைது

Published On 2018-02-17 06:48 GMT   |   Update On 2018-02-17 06:48 GMT
சோழிங்கநல்லூர் அருகே பெண் என்ஜினீயரை தாக்கிய வழிப்பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த பெண் என்ஜினீயரான லாவண்யா. சென்னை நாவலூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 12-ந் தேதி இரவு மொபட்டில் லாவண்யா பெரும்பாக்கத்தை அடுத்த நுங்கம் பாளையத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு தாழம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஒட்டியம்பாக்கம் - அரசன்கழணி காரனை சாலையில் சென்றபோது பின்னால் வந்த வழிப்பறி கும்பல் லாவண்யா தலையில் இரும்பு கம்பியால் தாக்கினார்கள்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லாவண்யா தலையில் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் மயங்கி அவளிடம் இருந்த நகை, செல்போன்களை பறித்துக் கொண்டு மொபட்டையும் கொள்ளையர்கள் எடுத்து கொண்டு சென்றுவிட்டனர்.

இரவு முழுவதும் சாலையோரம் மயங்கி கிடந்த அவரை காலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு லாவண்யாவுக்கு சுயநினைவு திரும்பியது.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் தன்னை தாக்கியவர்களை சும்மாவிடக்கூடாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையே கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற லாவண்யாவின் மொபட் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அருகே கிடந்தது. அதை போலீசார் மீட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார்கள். இதில் மொபட்டை ஓட்டி வந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்தது.

இந்த நிலையில் பெண் என்ஜினீயரை தாக்கி வழிப்பறி செய்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த லோகேஷ், நாராயணமூர்த்தி, விநாயக மூர்த்தி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

Tags:    

Similar News