செய்திகள்

சோழிங்கநல்லூர் அருகே பெண் என்ஜினீயரை தாக்கிய மேலும் 2 பேர் சிக்கினர்

Published On 2018-02-16 17:39 IST   |   Update On 2018-02-16 17:39:00 IST
பெண் என்ஜினீயரை தாக்கிய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவான்மியூர்:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லாவண்யா (26). இவர் நாவலூரில் உள்ள சாப்ட் வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

கடந்த திங்கட் கிழமை இரவு அவள் பணி முடிந்து பெரும்பாக்கத்தை அடுத்த நுங்கம்பாளையத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு தாழம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஒட்டியம்பாக்கம் - அரசன்கழணி காரனை சாலையில் சென்றபோது வழிப்பறி கும்பல் லாவண்யாவை இரும்பு கம்பியால் தாக்கினர்.

இதில் அவர் நிலைதடு மாறி கீழே விழுந்தார். உடனே கொள்ளை கும்பல் லாவண்யா வைத்திருந்த செல்போன் மற்றும் மொபட்டை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

கொள்ளையர்கள் தாக்கிய போது அருகில் கிடந்த கல்லில் விழுந்ததால் லாவண்யாவின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. மயங்கி கிடந்த அவரை மறுநாள் அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவருக்கு நேற்று முன்தினம் நினைவு திரும்பியது. அப்போது கொள்ளையர்களை சும்மா விடக்கூடாது என்று போலீசாரிடம் அவர் கூறினார்.

கொள்ளை கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக செம்மஞ்சேரியை சேர்ந்த ஒருவனை ஏற்கனவே போலீசார் பிடித்து இருந்தனர்.

இந்த நிலையில் அவன் கொடுத்த தகவலின் படி அவரது நண்பர்கள் மேலும் 2 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

Similar News