செய்திகள்

சென்னையில் இருந்து கடலூருக்கு வந்த அரசு பஸ்சில் ரூ.26 லட்சம் பறிமுதல்

Published On 2018-01-30 09:26 GMT   |   Update On 2018-01-30 09:26 GMT
சென்னையில் இருந்து வந்த அரசு பஸ்சில் வாலிபரிடம் ரூ.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் காஜா (வயது 27). இவர் இன்று காலை சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் ஏறினார்.

அந்த பஸ் இன்று மதியம் 1.30 மணிக்கு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடிக்கு வந்தது.

அப்போது அங்கிருந்த மது விலக்கு போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் இருந்த பேக்குகளை திறந்து பார்த்தனர்.

பஸ்சில் காஜா வைத்திருந்த பேக்கையும் திறந்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதில் மொத்தம் ரூ.26 லட்சம் இருந்தது.

இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காஜாவையும், பணக்கட்டுகள் இருந்த பேக்கையும் எடுத்துக் கொண்டு கடலூர் முதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது காஜா கூறியதாவது:-

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பாரூக் என்பவர் ரூ.26 லட்சத்தை என்னிடம் கொடுத்தார். அதனை கடலூர் முதுநகர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று கொடுத்துவிடும்படி கூறினார். அவர் கூறியப்படி பணத்தை பஸ்சில் கொண்டு வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஜாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

பஸ்சில் பயணம் செய்து வந்த வாலிபரிடம் இருந்து ரூ.26 லட்சம் கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து உயர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஓடும் பஸ்சில் வாலிபரிடம் ரூ.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News