செய்திகள்

வானூர் அருகே மனித ஒற்றுமைக்கான நடைபயணம்: கவர்னர் கிரண்பேடி பங்கேற்பு

Published On 2018-01-28 06:18 GMT   |   Update On 2018-01-28 06:18 GMT
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் கிராம செயல்வழி குழு சார்பில் வானூர் அருகே உள்ள இரும்பை பகுதியில் மனித ஒற்றுமைக்கான நடைபயணத்தில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்றார்.

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் கிராம செயல்வழி குழு சார்பில் வானூர் அருகே உள்ள இரும்பை பகுதியில் மனித ஒற்றுமைக்கான நடைபயணம் இன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக இரும்பை பகுதியில் உள்ள மாகாலீஸ்வரர் சிவன் கோவிலுக்கு புதுவை கவர்னர் கிரண்பேடி வந்தார். அந்த பகுதி பொதுமக்கள் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கவர்னர் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்பமரியாதை செய்யப்பட்டது. கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மனித ஒற்றுமைக்கான நடைபயணத்தை கவர்னர் கிரண்பேடி, தொடங்கி வைத்து அவரும் நடந்து வந்தார்.

ஆரோவில் கிராம செயல் உதவிக்குழு உறுப்பினர் அன்பு மோரிஸ், மனித ஒற்றுமைக்கான சமூக ஆர்வலர் ஸ்ரீயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாணவ, மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொட்டும் பனியில் கலந்து கொண்டனர்.

கோட்டக்கரை கிராமம் பகுதி அருகே நடைபயணம் சென்றபோது அந்த பகுதி மக்களும் கவர்னர் கிரண்பேடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கவர்னர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். கவர்னருக்கு பொதுமக்கள் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் நடைபயணம் செல்லும் வழியில் கவர்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தநடைபயணம் இரும்பை கிராமத்தில் தொடங்கி சுமார் 15 கிலோமீட்டார் வரை சென்று குயிலாப்பாளையம் கிராமத்தில் முடிவடைந்தது. நடைபயணத்தின் போது கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி பாஸ்கர் தலைமையில் புதுவை மாநில போலீசார் 30 பேரும், கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயக்குமார், அருள் முருகன் மற்றும் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News