செய்திகள்

எம்.சி.சம்பத் தூண்டுதலால் என் குடும்பத்தினர் மீது வழக்கு: முதல்வரிடம் சத்யா எம்.எல்.ஏ.மனு

Published On 2018-01-12 15:50 IST   |   Update On 2018-01-12 15:50:00 IST
எம்.சி.சம்பத் தூண்டுதலின் பேரில் தொடரப்பட்டுள்ள வழக்குகளால் நானும், எனது குடும்பத்தாரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக சத்யா எம்.எல்.ஏ. முதல்வருக்கு மனு கொடுத்துள்ளார்.

பண்ருட்டி:

சென்னை ஐகோர்ட்டில், இந்தியன் மக்கள் கட்சித் தலைவர் வாராகி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஓடை புறம்போக்கு நிலத்தை கஸ்தூரி என்பவர் கடந்த 2000-ம் ஆண்டு ஆக்கிரமித்து கொண்டார்.

இந்த நிலத்தை பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்த பன்னீர்செல்வமும், அவரது மனைவி சத்யாவும் (தற்போது எம்.எல்.ஏ.,) சட்ட விரோதமாக தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டனர்.

இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தேன். ஆனால், இதுவரை புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய கடலூர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். இது குறித்து போலீசாரின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு உத்தர விட்டார். விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தார்.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பண்ருட்டி தொகுதிக்கு தேவையான திட்டங்களை நான் செயல்படுத்த முற்படுகிறேன். அவற்றை அமைச்சர் எம்.சி.சம்பத் முடக்குகிறார். கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். இது தொடர்பாக நான் உங்களிடமும் (முதல்- அமைச்சர்) புகார் செய்தேன்.

இதை மனதில் வைத்து மாவட்ட அரசு வக்கீல் மூலமாக சென்னையில் உள்ள மற்றொரு வக்கீலை கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் எனது குடும்ப உறுப்பினர்கள் மீது பல்வேறு பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளால் நானும், எனது குடும்பத்தாரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். #tamilnews

Similar News