செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 20 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடுகிறது

Published On 2018-01-05 10:59 IST   |   Update On 2018-01-05 10:59:00 IST
ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, அந்தியூர், பு.புளியம்பட்டி, பவானி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
ஈரோடு:

அரசு பஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 சங்கங்கள் ஏற்க மறுத்து வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது.

இதையொட்டி நேற்று இரவில் இருந்தே வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்து விட்டனர்.

ஈரோடு மாவட்டத்திலும் ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, அந்தியூர், பு.புளியம்பட்டி, பவானி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் அரசு டவுன் பஸ்களும் பல இயக்கப்படவில்லை. இன்று காலையில் ஒன்றிரண்டு பஸ்கள் மட்டுமே ஓடியது.

இந்த பஸ்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. குறைவாக இயக்கப்பட்ட பஸ்களில் ஒப்பந்த டிரைவர்கள்-கண்டக்டர்களை வைத்து இயக்கி வருகிறார்கள்.

அரசு பஸ்கள் ஓடாவிட்டாலும் தனியார் பஸ்கள் ஓடியது. அரசு பஸ்கள் இயங்காததையொட்டி சில தனியார் பஸ்களில் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

வழக்கம்போல் அரசு பஸ்களில் வெளியூர்களுக்கு வேலைக்கு போகும் தொழிலாளர்கள் மற்றும் வெளியூர்களுக்கு பள்ளி-கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் படிக்கும் மாணவ- மாணவிகள் இன்று காலை பெரிதும் அவதிப்பட்டனர்.

பஸ்கள் ஓடாததால் இந்த பஸ்கள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள டெப்போவில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடாததையொட்டி ஈரோடு பஸ் நிலையம் இன்று காலை முதல் வெறிச்சோடி காணப்பட்டது.

Similar News