செய்திகள்

நெல்லிக்குப்பத்தில் சர்க்கரை ஆலை முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்: பிரேமலதா விஜயகாந்த் கைது

Published On 2018-01-04 14:25 IST   |   Update On 2018-01-04 18:30:00 IST
கடலூர் மாவட்டம் நொச்சிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கைது செய்யப்பட்டார்.
நெல்லிக்குப்பம்:

விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை வழங்கக் கோரி கடலூர் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் தே.மு.தி.க. போராடி வருகிறது. தற்போது அரசியலுக்கு யாரெல்லாமோ வருகிறார்கள், அவர்கள் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறுகிறார்கள்.

தே.மு.தி.க. மட்டுமே மக்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்காக போராடி வருகிறது. கட்சி ஆரம்பிக்கப் போகிறவர்களால் போராட முடியுமா? நாங்கள் போராடி வருவதால்தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறோம். எங்கள் கட்சிக்கு இணையாக எந்த கட்சியும் இல்லை.

தூங்கி கொண்டிருந்தவர்கள் இப்போது கட்சி ஆரம்பிக்க உள்ளனர். யார் வேண்டுமானாலும் வாருங்கள் எங்களுக்கு பிரச்சினை இல்லை. விஜயகாந்த் மக்களுக்காக போராடக்கூடியவர். அதனால்தான் அவர் மக்கள் மனதில் நிற்கிறார்.

எதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும்? நீங்கள் நிம்மதியாக தூங்க வேண்டியதுதானே? டுவிட்டரில் ஆட்சி நடத்த முடியாது. மக்கள் பிரச்சினைகளை அறிந்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து பிரேமலதா தலைமையில் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு தே.மு.தி.க.வினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பிரேமலதா கைது செய்யப்பட்டார். #tamilnews

Similar News