ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றிக்கு காரணம் என்ன?: ஈஸ்வரன் பேட்டி
ஈரோடு:
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அளித்த பேட்டியில் கூறியதாவது.-
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் வெற்றி பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசுக்கு எதிரான பிரசாரமும் தினகரன் வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்தது.
தினகரன் வெற்றி பெற்றது அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதற்காக இல்லை. தினகரன் வெற்றி பெற்றால் இந்த ஆட்சியை எப்படியாவது கலைத்து விடுவார் என்பதற்காக தான். மேலும் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க கைகோர்த்துவிடும் என்று சிலர் பொய்யான பிரசாரம் செய்தனர். இதுவும் தினகரன் பெற்றி பெற ஒரு காரணமாக இருந்தது.
அ.தி.மு.க.வினர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தனர். ஆனால் அவை இன்று வரை வெறும் அறிவிப்புகளாகவே உள்ளது. உதாரணமாக அத்திகடவு-அவினாசி திட்டம் ரூ.250 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும் என்றனர். ஆனால் அந்த திட்டம் என்னவாயிற்று?
இதே போல் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பற்றி பேசினார்கள். அதுவும் அப்படியே தான் இருக்கிறது. ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் இப்படி பல்வேறு அறிவிப்புகள் பற்றி கூறி கொண்டே செல்லலாம்.
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.