செய்திகள்

ரவடி வெட்டிக்கொலை: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது

Published On 2017-11-30 07:56 GMT   |   Update On 2017-11-30 07:57 GMT
வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி விட்டு திரும்பிய ரவுடியை வெட்டிக்கொலை செய்த கொலையாளிகளின் முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை பல்லவன் நகரைச் சேர்ந்தவர் விஜி என்ற விஜயகுமார். ரவுடியான இவர் மீது காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன.

நேற்று வழக்கு விசாரணைக்காக விஜயகுமார் பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜராகி விட்டு திரும்பி கொண்டிருந்தார்.

மண்ணடி தம்பிசெட்டி தெருவில் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் விஜயகுமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. தப்பி ஓடிய அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு 6 பேரும் தப்பினர்.

கொலையாளிகளை பிடிக்க பூக்கடை இணை கமி‌ஷனர் செல்வகுமார் உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் ஆனந்த்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

கொலை நடந்த இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கண்காணிப்பு கேமராவில் விஜயகுமார் ஓடுவதும், அவரை வெட்டி கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அந்த வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொலையாளிகள் 6 பேரும் யார் என்று தெரிய வந்தது.

அவர்கள் காசிமேடு, தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், முன் விரோதத்தில் கொலை செய்ததும் தெரிந்தது. கொலையாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News