செய்திகள்

வி‌ஷம் கொடுத்து ஒரு குழந்தை பலி: மற்றொரு குழந்தை-தாய்க்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2017-11-29 10:48 GMT   |   Update On 2017-11-29 10:48 GMT
பெற்றோர் வீட்டில் பணம் வாங்கி வரும்படி கணவர் கூறியதால் மனமுடைந்த மனைவி, குழந்தைக்கு விஷம் கொடுத்ததால் ஒரு குழந்தை இறந்தது. மற்றொரு குழந்தை-தாயும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த இளவரசநல்லூர், பொன்னிறை பகுதியில் வசிப்பவர் அறிவழகன் (வயது 40) கொத்தனார். இவருக்கு மாரியம்மாள், தேவி என்ற 2 மனைவிகள் உள்ளனர். 2-வது மனைவியான தேவிக்கு 3 வயதில் திரிசிகா, திரிசனா என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அறிவழகன், தேவியிடம் அவரது பெற்றோர் வீட்டில் பணம் வாங்கி வரும்படி வற்புறுத்தி உள்ளார்.இதில் மனமுடைந்த தேவி நேற்று மதியம் தனது 2 குழந்தைகளுக்கும் வி‌ஷம் கொடுத்து விட்டு அவரும் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் தேவி மற்றும் அவரது குழந்தைகளை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் திரிசிகா பரிதாபமாக இறந்தார்.

இதைத் தொடர்ந்து தேவியும், திரிசனாவும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பரிதாப சம்பவம் குறித்து ஆலிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வி‌ஷம் கொடுத்ததில் ஒரு சிறுமி பலியானதால் தேவி மீதும் தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட காரணமாக இருந்த அறிவழகன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இளவரச நல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News