செய்திகள்
தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த பஞ்சாலை கட்டிடம்.

பவானி அருகே பஞ்சாலையில் தீ விபத்து: ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்

Published On 2017-11-01 04:33 GMT   |   Update On 2017-11-01 04:33 GMT
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பஞ்சாயில் இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு பகுதியில் திருப்பதி டெக்ஸ் என்ற பெயரில் பஞ்சாலை உள்ளது. இந்த ஆலையின் உரிமையாளர் ஈரோட்டை சேர்ந்த வெங்கடாச்சலம் ஆவார்.

இந்த பஞ்சாலை அந்த பகுதியில் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வட மாநிலத்தை சேர்ந்த 20 பேர் பகல் இரவு என 2 ‘ஷிப்டு’களாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்த ஆலையில் திருப்பூரில் உள்ள காட்டன் வேஸ்டுகளை வாங்கி வந்து அதை நூல் ஆக தயாரித்து மீண்டும் திருப்பூருக்கே அனுப்பி வைக்கிறார்கள்.

இந்த மில்லில் இன்று அதிகாலை 3 மணியளவில் மின்சார கோளாறு காரணமாக ஒரு எந்திரத்தில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ மள..மளவென எரிந்து பரவ தொடங்கியது.

அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இது குறித்து உடனடியாக பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்களாலும் அணைக்க முடியவில்லை.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த காட்சி.


இதனால் ஈரோடு பெருந்துறை, அந்தியூர் ஆகிய ஊர்களில் இருந்தும் மேலும் 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இவர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிகாலை 3 மணிக்கு எரிய தொடங்கி தீ 6.10 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் மில்லில் உள்ள எந்திரம் பஞ்சுகள் கட்டிடம் என அனைத்தும் எரிந்து விட்டது. சேத மதிப்பு ரூ.1 கோடி இருக்கும்.

இந்த தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News