செய்திகள்
ரோட்டோர பள்ளத்தில் பள்ளி சீருடையுடன் பிணமாக கிடந்த மாணவி தீபா உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்.

நம்பியூர் அருகே விபத்து: 10-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2017-10-26 16:09 IST   |   Update On 2017-10-26 16:09:00 IST
நம்பியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மொட்டளம் ஏகாளிமேட்டை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகள் தீபா.

கோபி அடுத்த சாக்காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீபா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று வழக்கம்போல மாணவி தீபா பள்ளிக்கூடம் சென்றாள். ஆனால் மாலை வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் பெற்றோர் பதட்டம் அடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் தீபா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இன்று காலையும் தீபாவை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடினர். அப்போது ஏகாளிமேடு பகுதியில் உள்ள ரோட்டோர பள்ளத்தில் தீபா பள்ளி சீருடையுடன் பிணமாக கிடந்தார்.

இதை கண்டு பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தனர். இது பற்றி வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீபாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது தீபா வாகன விபத்தில் இறந்திருப்பது தெரியவந்தது. தீபா நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார். வீடு அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

தனது வீட்டை நோக்கி அவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீபாவின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் மாணவி தீபா ரோட்டோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

காலையில் பள்ளிக்கூடத்துக்கு உற்சாகமாக சென்ற மகளை மறுநாள் காலை ரோட்டோர பள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுததை பார்க்க உருக்கமாக இருந்தது.

இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தீபாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி மீது மோதிய வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News