செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பணிகளும் கமி‌ஷன் அடிப்படையில் தான் நடக்கிறது: துரைமுருகன்

Published On 2017-09-25 10:47 IST   |   Update On 2017-09-25 10:47:00 IST
தமிழகத்தில் அனைத்து பணிகளும் கமி‌ஷன் அடிப்படையில் தான் நடந்து வருகிறது என ஈரோட்டில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் பேசினார்.
ஈரோடு:

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. பொதுக்கூட்டம் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

தமிழக மக்களுக்கு சோதனை காலம் நடந்து கொண்டிருக்கிறது. இன உணர்ச்சி, மொழி உணர்ச்சி கிடையாது. அரசியல், கேள்விகள், பதில்கள், நிர்வாகம் என எதுவுமே தெரியாது. தமிழகத்தில் அனைத்து பணிகளும் கமி‌ஷன் அடிப்படையில் தான் நடக்கிறது.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு, நவோதயா பள்ளி போன்றவற்றை எதிர்த்தார். அவருடைய ஆட்சி நடப்பதாக கூறி வரும் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் ஏன் நீட் தேர்வையும், நவோதயா பள்ளிகளையும் எதிர்ப்பதில்லை?.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை ஆகியோர் ஜெயலலிதா குறித்து கேட்டபோது அவர்கள் அனைவரும் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்றே தெரிவித்தனர். கவர்னரிடம் கேட்டபோதும் அதையே கூறினார். 2 அணிகளாக இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும், சசிகலாவை நீக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்தார். 2 அணிகளும் இணைந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த நீதிபதியின் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை. இதுபற்றி நான் சட்டசபையில் கேள்வி எழுப்புவேன்.

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை அ.தி.மு.க.வினர் நடத்தி வருகிறார்கள். பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறந்த அடிமைகளாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓய்வு கிடையாது. விரைவில் அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News