செய்திகள்

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற கோரி கதிராமங்கலத்தில் 2-வது நாளாக கடையடைப்பு

Published On 2017-07-02 14:49 GMT   |   Update On 2017-07-02 14:49 GMT
கதிராமங்கலத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. பதட்டம் நிலவுவதால் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சார்பில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து 11 இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் வனதுர்க்கையம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு வயலில் கச்சா எண்ணெய் பரவியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் போடப்பட்டிருந்த முள்வேலிக்கு சிலர் தீ வைத்ததால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதில் பொதுமக்கள் பலர் காயம் அடைந்தனர். போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கதிராமங்கலம் மக்களை சந்தித்து அங்குள்ள நிலவரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக நேற்று மாலை காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் உள்ளிட்ட 6 பேர் சென்றனர்.

அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கதிராமங்கலத்தை விட்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கதிராமங்கலத்தில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News