செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்

Published On 2017-06-21 09:20 GMT   |   Update On 2017-06-21 09:20 GMT
சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரிய மக்கள் நடவடிக்கை எடுக்காததால் கடை முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழக்கொல்லையில் புதியதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடைக்கு மதுபிரியர்களின் கூட்டம் அதிகளவில் வரத்தொடங்கின.

அவர்கள் மதுவாங்கி குடித்து போதை தலைக்கேறியதும் அவ்வழியாக செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதில் ஆத்திரமடைந்த பெண்கள் அந்த டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

தகவல் அறிந்த கலால் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் பீர்பாஷா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசிவி மற்றும் போலீசார், கலால் வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனால், இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள், அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதி தர வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து, சிதம்பரம் தாசில்தார் மகேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

எழுத்துப்பூர்வமாக எழுதிய கடிதத்தை தாசில்தார் பொதுமக்களிடம் வழங்கினர்.

இதனை தொடர்ந்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags:    

Similar News