செய்திகள்

சேலையூரில் என்ஜினீயர் வீட்டில் 165 பவுன் நகை கொள்ளை

Published On 2017-04-18 08:59 GMT   |   Update On 2017-04-18 08:59 GMT
சேலையூரில் என்ஜினீயர் வீட்டில் 165 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கரணை:

சேலையூரை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம் சீனிவாச நகர், முதல் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடன் அவரது தாய் மைதிலி வசித்து வருகிறார்.

கார்த்திகேயன், வேலை சம்பந்தமாக டெல்லிக்கு சென்று விட்டார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த மைதிலி நேற்று இரவு அதே பகுதியில் உள்ள மற்றொரு மகன் வீட்டில் தூங்கினார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கார்த்திகேயன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவில் இருந்த 165 பவுன் நகை, 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் நிலத்தின் பத்திரங்களை கொள்ளையடித்தனர்.

மேலும் கைரேகை, போலீஸ் மோப்ப நாயிடம் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி தப்பி சென்று விட்டனர்.

இன்று காலை மைதிலி தனது வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். எனவே மைதிலி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News