செய்திகள்

சங்கராபுரம் அருகே சித்தமருத்துவர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2017-02-13 08:25 GMT   |   Update On 2017-02-13 08:25 GMT
சங்கராபுரம் அருகே சித்தமருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 48). சித்தமருத்துவர். இவர் சங்கராபுரம் மருந்து வணிகர் சங்க பொருளாளராக உள்ளார்.

நேற்று காலை இவர் குடும்பத்துடன் திருவண்ணாமலையில் உள்ள தனது மாமனார் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 40 பவுன் நகை, 2 கிலோ வெள்ளிப்பொருட்கள், 2½ லட்சம் ரொக்கபணம், ஆகியவைகளை கொள்ளையடித்து சென்றனர். இவைகளின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

நள்ளிரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்த சந்திரசேகர் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மூங்கில் துறைப்பட்டு போலீசில் புகார் செய்தார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

கைரேகை நிபுணர்கள் அங்கு வந்தனர். சம்பவ இடத்தில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். சித்தமருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த மர்மமனிதர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News