செய்திகள்

புதுவையில் மேலும் 3 பேருக்கு பன்றி காய்ச்சல்

Published On 2017-01-30 09:42 IST   |   Update On 2017-01-30 09:42:00 IST
புதுவையில் மேலும் 3 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, நோயாளிகள் 3 பேரும் ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் பன்றி காய்ச்சல் நோய் பரவி வருகிறது.

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் காலாப்பட்டு மற்றும் முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த 2 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை டாக் டர்கள் பரிசோதனை செய்த போது அவர்களுக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர்களுக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்களை 2 பேரும் இறந்தனர்.

இதனையடுத்து அரசின் சுகாதார துறை சார்பில் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பன்றி காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பின் அவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட ஆய்வுகளை செய்ய சுகாதார துறை உத்தரவிட்டிருந்தது.

அதோடு ஜிப்மர் மற்றும் கோரிமேடு மார்பக நோய் அரசு மருத்துவமனை ஆகிய வற்றில் பன்றி காய்ச்சல் நோய்க்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுவை இந்திராகாந்தி அரசு மருத் துவ கல்லூரியில் எம்.பி. பி.எஸ். படிக்கும் மாண வரை பன்றி காய்ச்சல் நோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து 3 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்களது ரத்தம் மற்றும் சளி ஆகியவை பரிசோதனைக்காக ஜிப்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனையில் அவர்களுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து நோயாளிகள் 3 பேரும் ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பன்றி காய்ச்சல் நோய்க்கான மருத்து, மாத்திரைகள் அரசின் ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News