வடலூரில் ஜெ.ஜெ.தீபா பேரவை தொடக்கம்: உறுப்பினர் படிவம் விநியோகம்
வடலூர்:
மறைந்த முதல்-அமைச் சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் அவரை ஆதரித்து பேனர் வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த டெல்டா விஜயன் என்பவர் தற்போது வடலூரில் ஜெ.ஜெ.தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். அந்த அமைப்புக்கு மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து உள்ளார்.
ஜெ.ஜெ.தீபா பேரவையின் புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் விழா வடலூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பின்னலூர் தங்க உதயகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஜெ.ஜெ.தீபா பேரவை நிறுவனத் தலைவர் டெல்டா விஜயன் கலந்து கொண்டு உறுப்பினர் படிவங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.தலைமைக்கு தீபாதான் தகுதியானவர் ஆவார். அ.தி.மு.க. தொண்டர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அவருக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
தீபா புதுகட்சி தொடங்கி தமிழகத்தில் நல்லாட்சி வழங்க வேண்டும். அவர் கட்சி தொடங்கினால் நாம் அவருக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும். தீபாவை சென்னையில் 2 முறை நிர்வாகிகள் சந்தித்து பேசினோம்.
அப்போது அவர் விரைவில் நல்ல தகவல் கூறுகிறேன் என்று தெரிவித்தார். மீண்டும் அவரை தொண்டர்களுடன் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். அவர் அழைப்பு விடுத்தால் விரைவில் தீபாவை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ், சலிம்ஷா, சிங்கார வேல், தமிழ்செல்வம், கொளஞ்சி, ராஜீ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
ஜெ.ஜெ.தீபா பேரவை தொடங்கி உள்ள டெல்டா விஜயன் சமாஜ்வாடி கட்சியில் செயலாளராக இருந்த வந்தார். அந்த கட்சியிலிருந்து விலகி தற்போது அவர் ஜெ.ஜெ.தீபா பேரவை தொடங்கியுள்ளார்.