ஈரோட்டில் தீபாவுக்கு ஆதரவாக “எம்.ஜி.ஆர் -ஜெயலலிதா அ.தி.மு.க” புதிய கட்சி தொடக்கம்
ஈரோடு:
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஒரு பிரிவினர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
ஈரோட்டிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வினர். சிலர் தாங்கள் வகித்து வந்த பதவிகளை ராஜினாமா செய்தனர். பிறகு தீபா பேரவை என்ற அமைப்பு தொடங்கினர்.
இந்த நிலையில் இன்று ஈரோட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு பிரிவினர் தீபாவுக்கு ஆதரவாக புதிய கட்சியை தொடங்கி உள்ளனர். அவர்கள் “எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” என பெயரில் கட்சி தொடங்கி உள்ளனர்.
மேலும் கட்சி கொடி மற்றும் சின்னம் அறிமுகம் செய்தனர். அதில் அ.தி.மு.க. கட்சி கொடியின் மத்தியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படம் பொறிக்கப்பட்டு உள்ளது. இரட்டை ரோஜா சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கொள்கைகளை காப்பாற்றுவது எனவும், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை தீபா தலைமையேற்று வழி நடத்த அழைப்பது எனவும், ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பது எனவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க வேண்டும் எனவும் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் மீனவர் அணி முன்னாள் செயலாளர் எஸ்.ஏ.பாரூக், மாநகர் மாவட்ட பேரவை முன்னாள் தலைவர் கவுரி சங்கர், நகர பேரவை முன்னாள் இணை செயலாளர் கமால் பாட்ஷா, முன்னாள் நகர பொருளாளர் கவுரிசங்கர், கொடுமுடி யூனியன் முன்னாள் தலைவர் தமிழ் செல்வி, ஈரோடு மாநகர 57-வது வார்டு பிரதிநிதி சரவணன், பெருமாள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.