செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்

ஈரோடு: பெரிய அக்ரகாரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் நகை - பணம் கொள்ளை

Published On 2017-01-03 11:33 IST   |   Update On 2017-01-03 11:33:00 IST
ஈரோடு பெரிய அக்ரகாரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் நகை - பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு பெரிய அக்ரகாரம் அண்ணா நகரில் உள்ள காந்தி வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி ரமணி (வயது 58).

கோவிந்தராஜ் இறந்து விட்டதால் வீட்டில் ரமணி மட்டும் வசித்து வருகிறார். நேற்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கொள்ளையர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று உள்ளனர். பிறகு அங்குள்ள முன்புற கதவின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே சென்றனர்.

அங்கு இருந்த பீரோவையும் உடைத்த அவர்கள் அதில் இருந்த 55 பவுன் நகைகள், 60 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர்.

கொள்ளையடித்த நகைகளை மூட்டையாக கட்டிய அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இன்று காலை வீட்டுக்கு வந்த ரமணி தனது வீடு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது பற்றி தகவல் கிடைத்தும் கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் சென்று பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Similar News