செய்திகள்

வார்தா புயல் காற்றழுத்த தாழ்வாக நீடிப்பதால் கடலூர் - மரக்காணத்தில் பரவலாக மழை

Published On 2016-12-14 15:31 IST   |   Update On 2016-12-14 15:31:00 IST
வார்தா புயல் காற்றழுத்த தாழ்வாக நீடிப்பதால் கடலூர் மற்றும் மரக்காணத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடல் சீற்றம் குறைந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கடலூர்:

தென்வங்கக்கடலில் உருவான வார்தா புயல் நேற்று முன்தினம் சென்னை அருகே கரையை கடந்தது. இதுதொடர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடித்து வருகிறது.

இதையொட்டி கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதன்படி கடலூரில் நேற்று காலை மழை பெய்தது. கடல் அதிக சீற்றமாக காணப்பட்டது. அதிக உயரத்துக்கு அலைகள் எழுந்தன.

நேற்று காலை கடல் அலையின் வேகம் திடீரென்று குறைந்தது. கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடல் உள்வாங்கியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்று 2-வது நாளாகவும் கடல் உள்வாங்கியே காணப்படுகிறது. கடலூரில் இன்று காலை 6 மணி முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. நெல்லிக்குப்பத்தில் நேற்றிரவு 12 மணி முதல் 1 மணிவரை பலத்த மழை கொட்டியது. கடலில் சீற்றம் அதிகம் இல்லை. கடல் சீற்றம் இல்லாததால் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க சென்றனர்.

பண்ருட்டியிலும் இன்று காலை மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சிதம்பரத்தில் மேகம் இருண்டு காணப்படுகிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இன்று காலை 7.30 மணியளவில் லேசாக மழை பெய்தது. தொடர்ந்து கனமழை கொட்டியது. 9 மணிவரை மழை நீடித்தது.

மரக்காணம், அனுமந்தை, கீழ்புத்துப்பட்டு, ஆலத்தூர், பிரம்மதேசம், எண்டியூர் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது. ரோடுகளில் தண்ணீர் பெருகி ஓடியது.

கடற்கரை பகுதியில் குளிர்ந்த காற்று வீசுகிறது. மரக்காணத்தில் இன்று கடல் சீற்றம் குறைந்தது. இதனால் மரக்காணத்தை சுற்றியுள்ள 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க சென்றனர்.

Similar News