செய்திகள்
புண்ணியமூர்த்தி, பிரவீன்ராஜ்.

புதுக்கோட்டை அருகே 3 மகன்களுக்கு வி‌ஷம் கொடுத்து தொழிலாளி தற்கொலை

Published On 2016-12-03 12:31 IST   |   Update On 2016-12-03 12:31:00 IST
புதுக்கோட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக 3 மகன்களுக்கு வி‌ஷம் கொடுத்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை கிராமம், பாய்காரத்தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா(30). இவர்களது மகன்கள் நாகராஜ் (10), பிரவீன்ராஜ் (7), சாரதி (5).

கந்தர்வக்கோட்டை அரசு பள்ளியில் நாகராஜ் 5-ம் வகுப்பும், பிரவீன்ராஜ் 2-ம் வகுப்பும், சாரதி 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். புண்ணியமூர்த்தி தினமும் குடித்து விட்டு வந்து மனைவி வனிதாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட தகராறால் சண்டை போட்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்த வனிதா, கடந்த 30-ந்தேதி புண்ணியமூர்த்தியின் தந்தை வேலாயுதம் இறந்துவிட்டதால் கல்லாக்கோட்டைக்கு வந்துள்ளார்.

அப்போதும் புண்ணியமூர்த்தி, வனிதாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனால் மீண்டும் வனிதா தனது குழந்தைகள் 3 பேரையும் கணவர் வீட்டில் விட்டு விட்டு, தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த புண்ணியமூர்த்தி தனது 3 மகன்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து எலி மருந்தை டீயில் கலந்து தனது 3 மகன்களுக்கும் கொடுத்தார். பின்னர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை புண்ணியமூர்த்தியின் அண்ணன் சிவக்குமார், தனது தம்பி மகன்களை பார்ப்பதற்காக வந்தார். அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு புண்ணியமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். பிரவீன்ராஜ் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாகவும், நாகராஜ், சாரதி ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இருந்தனர். இதைக்கண்ட சிவக்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாகராஜ், சாரதி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் இறந்த சம்பவம் கந்தர்வகோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News