செய்திகள்

புயல் எச்சரிக்கை எதிரொலி: புதுக்கோட்டையில் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2016-11-30 10:11 IST   |   Update On 2016-11-30 10:11:00 IST
புயல் எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள், நாட்டுபடகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இருந்து ஏனாதி வரையுள்ள கிருஷ்ணாச்சிபட்டினம், கோடியக்கரை, புதுக்குடி, அய்யம்பட்டினம், முத்துக்குடா, ஆர்.புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் கடற்கரை கிராமங்கள் ஆகும். இங்கிருந்து சுமார் 1500 நாட்டுப்படகுகள் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.

இதே போல் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். சுமார் 650 விசைப்படகுகள் மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் பண பரிமாற்ற பிரச்சினை காரணமாக கோட்டைப்பட்டினம் மீனவர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதனிடையே தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுக்கோட்டை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இன்று மீன்பிடிப்பதற்காக அனுமதி சீட்டும் வழங்கப்படவில்லை. இதனால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள், நாட்டுபடகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

Similar News