செய்திகள்

ரூ.23 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதான மின் வாரிய என்ஜினீயர் சஸ்பெண்டு

Published On 2016-11-02 04:21 GMT   |   Update On 2016-11-02 04:21 GMT
விருத்தாசலத்தில் மின் இணைப்பு வழங்க ரூ.23ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதான மின் வாரிய என்ஜினீயரை சஸ்பெண்ட் செய்து கடலூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சிவானந்தம் உத்தரவிட்டார்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டி.நகரை சேர்ந்தவர் சையத் உசேன். இவர் பஸ் நிலையம் அருகே தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டி வருகிறார்.

இந்த வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க விருத்தாசலம் அருகேயுள்ள கண்டியாங்குப்பம் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க, உதவி மின்பொறியாளர் இளங்கோவன் ரூ.23 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டார். இதுபற்றி சையத்உசேன் கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி சையத்உசேன், ரசாயன பவுடர் தடவிய பணத்தை கடந்த 26-ந் தேதி கண்டியாங்குப்பம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த உதவி மின்பொறியாளர் இளங்கோவனிடம் கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், இளங்கோவனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான இளங்கோவனை சஸ்பெண்ட் செய்து கடலூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சிவானந்தம் உத்தரவிட்டார்.

Similar News