செய்திகள்

விடுமுறையையொட்டி பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

Published On 2016-10-31 15:41 IST   |   Update On 2016-10-31 15:41:00 IST
தீபாவளி விடுமுறையொட்டி பிச்சாவரத்துக்கு வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு படகு சவாரி செய்தனர்.
பரங்கிப்பேட்டை:

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா தலமாக உள்ளது. இந்த சுற்றுலா தலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ளது. இதை பார்த்து ரசிப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகளும் பிச்சாவரத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி விடுமுறை என்பதாலும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதாலும் பிச்சாவரத்துக்கு வழக்கத்தை விட ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு படகு சவாரி செய்தனர்.

சுரபுன்னை காடுகளை சுற்றிப்பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது செல்போன்களில் சதுப்பு நிலக்காடுகளை படம் பிடித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள குடில்களில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை குடும்பத்தினருடன் சாப்பிட்டனர். பிச்சாவரத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் பயணிகள் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

Similar News