செய்திகள்

ராணுவ இடத்தை பட்டா போட்டு விற்ற கில்லாடி பெண்- உடந்தையாக இருந்த முன்னாள் கவுன்சிலர் கைது

Published On 2016-10-22 14:42 IST   |   Update On 2016-10-22 14:42:00 IST
சென்னையில் ராணுவ இடத்தை பட்டா போட்டு விற்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். உடந்தையாக இருந்த கவுன்சிலரை கைது செய்தனர்.

தாம்பரம்:

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை பதிவு செய்வதற்கு கோர்ட்டு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தையே ஒரு பெண் பட்டா போட்டு விற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

செய்யூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். திருவண்ணாமலையில் தையல் எந்திர நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணிடம் ஒரு வீட்டு மனையை விலைக்கு வாங்கியுள்ளார்.

அந்த மனைக்கு ரூ.50 லட்சம் விலை பேசப்பட்டு ரூ.39 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார். பின்னர் அந்த இடத்தை பத்திர பதிவு செய்த போதுதான் அந்த இடம் ராணுவத்திற்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. போலியாக பட்டா தயாரித்து அந்த இடத்தை ஜோதி விற்பனை செய்துள்ளார்.

இதை அறிந்ததும் கார்த்திகேயன் தான் கொடுத்து ரூ.39 லட்சத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.

பணத்தை கொடுக்க மறுத்த ஜோதி அவரது கூட்டாளிகளான குட்டி என்ற ரமேஷ் உள்பட சிலருடன் சென்று கார்த்திகேயனை கொன்று விடுவதாக மிரட்டி இருக்கிறார்.

இதுபற்றி கார்த்திகேயன் பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி குட்டி என்ற ரமேசை கைது செய்தனர். ஜோதி உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள குட்டி முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News