செய்திகள்

சிதம்பரத்தில் வீட்டுக்குள் புகுந்த டாஸ்மாக் லாரி - மதுபாட்டில்கள் நாசம்

Published On 2016-10-07 13:05 IST   |   Update On 2016-10-07 13:05:00 IST
சிதம்பரத்தில் இன்று காலை டாஸ்மாக் லாரி வீட்டிற்குள் புகுந்த விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது.
சிதம்பரம்:

தஞ்சையை அடுத்த ராஜமன்னார்குடியில் இருந்து கடலூரில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு 1000 அட்டை பெட்டிகள் அடங்கிய மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது. லாரியை தஞ்சை மாவட்டம் சீதப்படுகை பகுதியை சேர்ந்த ராஜசேகர் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார்.

லாரி சிதம்பரம் அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியில் கடலூர்- சிதம்பரம் புறவழிச்சாலையில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மின் கம்பத்தில் மோதியது. பின்னர் அருகில் இருந்த ராஜாராம் என்பவர் வீட்டின் சுவரை இடித்து கொண்டு சமையல் அறைக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜசேகர் காயம் அடைந்தார். மோதிய வேகத்தில் லாரியில் தீப்பிடித்தது.

இது குறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியில் ஏற்றப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது.

அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜாராமின் குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். லாரி வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்து நின்றதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News