செய்திகள்

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி கொலையில் 2 மாணவர்கள் கைது

Published On 2016-09-22 12:41 IST   |   Update On 2016-09-22 12:42:00 IST
மயிலாடுதுறை அருகே காதலை கைவிட்டு வேறொருவரிடம் பேசியதால் ஆத்திரம் அடைந்த காதலன் பெண்ணை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆக்கூர் அப்புராஜபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், இவரது மகள் தீபிகா (வயது 19), பூம்புகாரில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். ரவிச்சந்திரன் இறந்துவிட்டதால் தாய் சுமதி பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு செல்போனில் பேசியபடியே வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் அதிகாலை அங்குள்ள ராஜேந்திரன் வாய்க்காலில் தீபிகா மர்மமானமுறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தீபிகாவின் செல்போன் மூலம் துப்புதுலக்க தொடங்கினர்.

அவரது செல்போனில் யார் யார் பேசிஉள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் லாவன்படுகையை சேர்ந்த அரசன் (21), கண்டந்தகுடியை சேர்ந்த மோகன் (20) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் தீபிகாவை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகவேல் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்.

அதில் கொலை செய்யப்பட்ட தீபிகாவின் தோழியின் சகோதரர் அரசன். இவர் நாகையில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருபவர் மோகன் (20) இருவரும் நண்பர்கள்.

அரசனின் தங்கை மூலம் தீபிகாவுக்கு அரசன் பழக்கமாகியுள்ளார். அந்த பழக்கம் நாளைடைவில் காதலாகி மாறியுள்ளது. இந்நிலையில் தீபிகாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசனை அவர் புறக்கணித்து வந்துள்ளார். அப்போது தீபிகா வேறொரு நபருடன் செல்போனில் பேசுவதை பதிவு செய்த மோகன் அதனை அரசனிடம் காண்பித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அரசன் சம்பவத்தன்று இரவு தீபிகாவை பார்க்க நண்பர் மோகனுடன் சென்றுள்ளார். அப்போது மோகன் தீபிகாவிடம் பேசியபிறகு அழைக்கும்படி கூறிவிட்டு கடைக்கு சென்றுவிட்டாராம்.

இதையடுத்து தீபிகாவிடம் அவர் செல்போனில் வேறொருவருடன் பேசுவதை போட்டுகாட்டி யார் அந்த நபர் என அரசன் கேட்டுள்ளார். அதற்கு தான் அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அரசன் தன்னை காதலித்துவிட்டு இப்போது வேறொருவரை காதலிப்பதா? அந்த நபரிடம் உள்ள தொடர்பை நிறுத்தி கொள்ளும்படி கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அவர் அருகே செங்கல்கால்வாயில் கிடந்த மண்வெட்டியின் கம்பை எடுத்து தாக்கியுள்ளார். இதில் தீபிகா மயங்கி விழுந்தார். இதையடுத்து தீபிகாவை வாய்க்காலில் தள்ளிவிட்டுவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் தனது நண்பர் மோனுடன் சென்றுவிட்டார்.

மறுநாள் அதிகாலை தீபிகா வாய்க்காலில் பிணமாக கிடப்பதாக வந்த செய்தியை பார்த்த பின்புதான் அரசன் தீபிகாவை கொலை செய்திருப்பது மோகனுக்கு தெரிந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News