செய்திகள்

சீர்காழி அருகே பெண்ணை கொன்று நகை கொள்ளை

Published On 2016-09-20 03:46 GMT   |   Update On 2016-09-20 03:46 GMT
கொள்ளிடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் தாண்டவன் குளத்தை சேர்ந்தவர் அகோர மூர்த்தி. இவரது மனைவி சீத்தா (35). இவர்களுக்கு குழந்தை இல்லை.

அகோர மூர்த்தி கேரள மாநிலம் கொச்சி துறை முகத்தில் படகு கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் சீத்தா தனியாக வசித்து வந்தார்.

கடந்த 20 நாட்களுக்கு முன் அகோர மூர்த்தி சொந்த ஊருக்கு வந்து சென்றார். இந்த நிலையில் நேற்று சீத்தாவின் வீடு நீண்ட நேரமாக பூட்டப்பட்டு இருந்தது.

அக்கம் பக்கத்தினர் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். அப்போது பின் பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சீத்தா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அவர் அணிந்திருந்த 5¼ பவுன் நகையை காணவில்லை. அவரை கொள்ளை கும்பல் கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து புதுப்பட்டினம் போலீசுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

சீத்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை குறித்து சீத்தாவின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வந்த பின்னர் தான் வீட்டில் வேறு பொருட்களை கொள்ளை போனதா? என்பது தெரிய வரும். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News