செய்திகள்

காட்பாடியில் வியாபாரியை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை: வேலூர் கோர்ட்டு உத்தரவு

Published On 2016-09-16 08:36 GMT   |   Update On 2016-09-16 08:36 GMT
காட்பாடியில் வியாபாரியை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

வேலூர்:

காட்பாடி சஞ்சீவராயபுரம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 30). இவர் சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு சென்று பருப்பு விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார். இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த தனவேலு (31), துரைசாமி (33), ஸ்ரீரங்கன் (30).

கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி காலை விநாயகத்தை அவரது நண்பர்கள் 3 பேரும் வெளியே அழைத்து சென்றனர். பின்னர் 4 பேரும் சக்கராகுட்டை என்ற இடத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அத்துடன் பணம் வைத்து சூதாடினர். சூதாட்டத்தில் விநாயகத்திற்கும் அவர்களுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் விநாயகத்தை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

தொடர்ந்து அவர்கள் விநாயகத்துக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி, தாக்கி கொலை செய்துள்ளனர். கொலையை மறைக்க பிணத்தை 3 பேரும் சேர்ந்து காட்பாடி - ராமாபுரம் ரெயில் நிலைய தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்று விட்டனர்.

இது தொடர்பாக காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நடராஜன் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Similar News