செய்திகள்

காஞ்சீபுரத்தில் கர்நாடக முதல்வர் உருவ பொம்மை எரிப்பு

Published On 2016-09-13 12:03 IST   |   Update On 2016-09-13 12:03:00 IST
தமிழக வாழ்வுரிமை கட்சியின் உறுப்பினர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து மாலை விடுவித்தனர்.
காஞ்சீபுரம்:

கர்நாடகாவில் காவிரி நீர் தொடர்பாக தமிழர்கள் மீது தாக்குதல் தொடர்வதை கண்டித்து காஞ்சீபுரம் காந்தி சாலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தீனன் தலைமையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் ஏராளமான போலீசார் காந்திசாலையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து மாலை விடுவித்தனர்.

காஞ்சீபுரம் நகரத்தில் கோயில்களுக்கும் பிரசித்தி பெற்ற பட்டு சேலை வாங்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

காவிரி நதி நீர் பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் தொடரும் நிலையில் காஞ்சீபுரம் நகரத்திற்கும் கோயிலுக்கும் பட்டு சேலை வாங்கவும் வருகைதரும் கர்நாடக மக்கள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்பு காரணமாக நகரின் முக்கிய கோயில்கள் உள்ள பகுதிகள் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் போலீசார் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்களை ஒன்று சேர்த்து போலீஸ் காவலுடன் நகர எல்லை வரை பாதுகாப்பு அளித்து தேசிய நெடுஞ்சாலை வரை உடன் சென்று அனுப்பி வைக்கின்றனர்.

Similar News