செய்திகள்

மது குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை குத்திக்கொன்ற வழக்கில் மகன் கைது

Published On 2016-09-13 08:23 IST   |   Update On 2016-09-13 08:23:00 IST
மது குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் மகனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வீடு புகுந்து திருடியது தெரிந்தது. அவரிடம் இருந்த 45 பவுன் நகை, கார், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அருகே கீழம்பி பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன்(வயது 58). எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி ஜெயந்தி(45). இவர்களுக்கு வினோத்குமார்(31), குமரன்(28) என 2 மகன்கள் உள்ளனர். திருவாரூரைச் சேர்ந்த கோவிந்தராஜன், கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் குடும்பத்துடன் காஞ்சீபுரத்தில் குடியேறினார்.

கடந்த 5-ந்தேதி இரவு கோவிந்தராஜன், வினோத்குமார் இருவரும் மதுபோதையில் இருந்தனர். அப்போது மேலும் மது அருந்த பணம் தரும்படி தந்தையிடம் வினோத்குமார் கேட்டார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், தந்தை என்றும் பாராமல் கோவிந்தராஜனை கத்தியால் குத்திக்கொலை செய்தார். இதுபற்றி பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வினோத்குமாரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை காஞ்சீபுரம் அருகே வெள்ளக்கேட் என்ற இடத்தில் காரில் சென்ற வினோத்குமாரை பாலுசெட்டிசத்திரம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அப்போது அவர், தனது தந்தை கோவிந்தராஜனை கத்தியால் குத்திக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வினோத்குமார் சென்னை, காஞ்சீபுரம், திருவாரூர், கோவை, திருச்சி உள்பட தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வீடு புகுந்து திருடியதும், இந்த திருட்டு வழக்குகளில் பலமுறை சிறை சென்று வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர், திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் திருடிய 45 பவுன் நகையை திருவாரூரில் உள்ள தங்கள் வீட்டில் மறைத்து வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், கோவில்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து திருவாரூரில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 45 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான வினோத்குமாரை போலீசார் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கார், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News