நாகை பகுதியில் படகு பழுதாகி கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 46). மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 31-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த செல்வம் (37), சின்னதுரை (50), சதீஷ் (35), ஆதிகேசவன் (27), மோகன் (29), கந்தசாமி (35), ரத்தினசாமி (30) ஆகிய 7 பேரும் கடுவையாற்றில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி அவர்கள் மீன்பிடித்து கொண்டு இருக்கும் போது அவர்கள் சென்ற படகின் என்ஜின் பழுதானது. இதனால் அவர்கள் என்ன செய்வது என தெரியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர்.
அவர்கள் இதுகுறித்து இந்திய கடலோர காவல்படைக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களிடம் உதவி கேட்டனர்.
பின்னர் அந்த மீனவர்கள் 2 விசைப்படகுகளில் சென்று தத்தளித்த 7 மீனவர்களையும், படகையும் நாகை துறைமுகத்திற்கு மீட்டு வந்தனர்.
இதுகுறித்து மீட்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது:-
நாங்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது படகு என்ஜின் பழுதானது. அப்போது இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் நாங்கள் 2 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டு இருந்தோம். பின்னர் அந்த வழியாக வந்த மீனவர்கள் எங்களையும், படகையும் மீட்டு கரை சேர்த்தனர். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.