செய்திகள்

காதல் என்ற பெயரில் பெண்களை கொலை செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்: பா.ம.க. வலியுறுத்தல்

Published On 2016-09-10 13:47 IST   |   Update On 2016-09-10 13:47:00 IST
காதல் என்ற பெயரில் பெண்களை கொலை செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று பா.ம.க. மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியின் போது கூறினார்.
விருத்தாசலம்:

ஒருதலை காதலுக்கு பலியான நர்சு புஷ்பலதாவின் உடல் இன்று மதியம் 11.45 மணிக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சு மூலம் விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

புஷ்பலதா உடல் அவரது வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உடலைப் பார்த்து புஷ்பலதாவின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். புஷ்பலதா உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பா.ம.க. பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் பா.ம.க. மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் காதல் என்ற பெயரில் பெண்களை வதை செய்யும் செயல் அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை வெறி தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.

தூக்கு தண்டனை விதிக்குமாறு கூறுவது பா.ம.க.வுக்கு ஏற்புடையது அல்ல. ஆனாலும் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதே சரியான முடிவாக இருக்கும்.

அவ்வாறு செய்தால்தான் இதுபோன்ற கொலைகள் நடக்காது. பெண் முதல்-அமைச்சர் இருக்கும் தமிழகத்தில் பெண்கள் காதல் என்ற பெயரில் கொலை செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு வெட்கக் கேடானது.

ஜனநாயகம் காப்பாற்றப்படவும், பெண்கள் நலனை காக்கவும் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் நிம்மதியாக நடமாட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புஷ்பலதா வீட்டின் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News