செய்திகள்

சீர்காழியில் தனியார் பஸ் மோதி 2 பேர் பலி

Published On 2016-09-09 12:28 IST   |   Update On 2016-09-09 12:28:00 IST
சீர்காழி அருகே தனியார் பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி:

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வேடல் தெருவை சேர்ந்தவர் ஜீவா என்கிற ஜீவானந்தம் (25). இவரது நண்பர் தினேஷ் (21). நெய்குப்பை கீழ தெருவை சேர்ந்தவர். இருவரும் வைத்தீஸ்வரன் கோவிலில் அகல் விளக்கு செய்து விற்பனை செய்து வந்தனர்.

இன்று காலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சீர்காழி வந்தனர். பின்னர் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். செங்கமேடு என்ற இடத்தில் ஒரு திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

அப்போது மயிலாடு துறையில் இருந்து சிதம்பரத்திற்கு தனியார் பஸ் சென்றது. இந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ஜீவானந்தம், தினேஷ் ஆகியோர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. அவர்கள் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள்.

விபத்து குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் சிதம்பரத்தை சேர்ந்த நடராஜ் (48), கண்டக்டர் காட்டுமன்னார் கோவில் முருகன் ஆகியோரை கைது செய்தனர்.

2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News