செய்திகள்
சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.42 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது
சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.42 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஜெட்ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
இதில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அபுபக்கர் (வயது 40), காசிம் (37), சென்னையை சேர்ந்த முகம்மது (29) ஆகியோரது சூட்கேஸ்களில் அமெரிக்க டாலர் மற்றும் பல்வேறு நாட்டு பணம் நிறைய இருந்தது. இது இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம் ஆகும்.
இவற்றை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் 3 பேரையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூர் செல்ல 3 பேரும் டூரிஸ்ட் விசா வைத்திருந்ததால் ஹவாலா பணம் கடத்த முயற்சி செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.