செய்திகள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வெடிகுண்டுகள், கத்திகளுடன் 5 பேர் கைது

Published On 2016-08-12 08:12 IST   |   Update On 2016-08-12 08:13:00 IST
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளத்தில் 4 வெடிகுண்டுகள், 3 பட்டாக்கத்திகளுடன் சுற்றித்திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதியா? என போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர்:

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் பகுதியில் நள்ளிரவில் சிலர் கும்பலாக சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு ஒரு இடத்தில் பதுங்கியிருந்த 5 பேரை போலீசார் சுற்றிவளைத்து துப்பாக்கிமுனையில் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் வெடிகுண்டுகள், பட்டாக்கத்திகள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

அவர்கள் 5 பேரும் கேளம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 24), அம்பத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல்சையது (21), ஷாகுல் ஹமீது (24), அன்சாரி (21), ஆஷிக் ரகுமான் (21) என தெரிந்தது. இவர்களில் சுரேஷ் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின்கீழ் சிறை சென்று திரும்பியவர். சுரேஷ் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, சென்னை அம்பத்தூரில் நடந்த இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒருவருக்கும், சுரேசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் விடுதலையாகி வெளியேவந்த சுரேஷிடம் புழல் சிறையிலிருந்து அந்த குற்றவாளி போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு சென்றால் அங்கு ஒருவன் மூன்று கத்தியும், வெடிகுண்டுகளுடன் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டும் கொடுப்பான். அதை வாங்கிவந்து கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் அருகே நின்றால் இரவு 10 மணிக்கு மேல் தனது ஆட்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு வந்து வாங்கிக்கொள்வார்கள் என்று சுரேஷிடம் கூறியுள்ளார்.

இதன்படி புதுச்சேரியில் 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 3 பட்டாக்கத்திகளை வாங்கிய சுரேஷ் நேற்றுமுன்தினம் இரவு கேளம்பாக்கம் ஓட்டல் ஒன்றின் அருகே காத்திருந்தார். அப்போது சென்னை பாடியிலிருந்து காரில் வந்த 4 பேர் சுரேஷிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கிக் கொண்டனர்.

இரவு நேரம் என்பதால் இந்த ஆயுதங்களுடன் சென்றால் போலீசாரிடம் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது என கருதிய 5 பேரும், நாச்சியார் குளம் அருகே உட்கார்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு அங்கேயே காத்திருந்தனர். இவர்களை பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்குவந்த போலீசார் 5 பேரையும் துப்பாக்கிமுனையில் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு ஸ்கூட்டர், 3 பட்டாக்கத்திகள், 4 வெடிகுண்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சுரேசை தவிர்த்து பிடிபட்ட மற்ற 4 பேரும் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் கூட்டாளிகள் என்பதால் சென்னையில் இந்து இயக்க தலைவர்கள் யாரையாவது கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்கள் பெறப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மேலும் புழல் சிறையிலிருந்து இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு குற்றவாளி போனில் பேசியது எப்படி? என சிறை காவலர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். புதுச்சேரியில் சுரேசிடம் ஆயுதங்களை கொடுத்தது யார்? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் பிடிபட்டவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News