செய்திகள்

ராஜஸ்தானில் காரைக்குடி என்ஜினீயர் கடத்தல்: தாயார் கதறல்

Published On 2016-07-29 13:36 IST   |   Update On 2016-07-29 13:36:00 IST
காரைக்குடியில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்துக்கு வேலைக்கு சென்ற என்ஜினீயர் கடத்தப்பட்டு இருக்கலாம் என தாய் புகார் தெரிவித்தார்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது23). டிப்ளமோ பொறியாளரான இவர் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்தார்.

பின்னர் ராஜஸ்தான் மாநிலம் ஜிம்ஜிம் பகுதியில் கேத்தரின் என்ற இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருடன் உ.பி.மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் அங்கு இருந்தனர். கடந்த 24-ந்தேதி வெளியே சென்ற சரவணன் பின்னர் இருப்பிடத்துக்கு திரும்ப வில்லை. இது குறித்து ஜிம்ஜிம் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்ஜினீயர் சரவணனின் தாய் புஷ்பா கூறுகையில், எனது மகன் காணாமல் போன தகவலை அவனுடன் வேலை செய்த நபர் எனக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு கணவர் மற்றும் மருமகனுடன் சென்று விசாரித்தபோது காணவில்லை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மட்டும் தெரிவித்தனர். இது தவிர வேறு ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

எனது மகன் பணத்துக்காக கடத்தப்பட்டானா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்று தெரிய வில்லை. அவனை கண்டு பிடித்து தரக்கோரி தமிழக முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Similar News