செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Published On 2016-07-28 12:02 IST   |   Update On 2016-07-28 12:02:00 IST
நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நீர்மட்டம் 60 அடியை தாண்டி இருந்தது.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை நீர்மட்டம் மோசமாக இருந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் உயர்ந்தது. இதனால் 30 அடியில் இருந்த நீர்மட்டம் படிப்படியாக கூடி 50 அடியை தாண்டி 59 அடியை எட்டியது. அதன் பிறகு நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றுவிட்டதால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் கடந்த 10 நாட்களாகவே நீர்மட்டம் 59.20 அடியாகவே இருந்தது.

இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1426 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டமும் 60 அடியை தாண்டி 60.07 அடியாக இருந்தது. அணையிலிருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நீர்பிடிப்பு பகுதியில் மழைபெய்து அணைக்கு தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உளளனர்.

Similar News