செய்திகள்

மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் பாம்புகளை பிடித்த 8 பேர் கைது: 360 பாம்புகள் பறிமுதல்

Published On 2016-07-28 07:31 IST   |   Update On 2016-07-28 07:31:00 IST
மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் பாம்பு களை பிடித்த 8 பேரை கைது செய்த கிண்டி வனத்துறையினர், அவர்களிடம் இருந்து 360 பாம்புகளை பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஏராளமான பாம்புகள் நடமாடுவதாக ஊழியர்கள் புகார் கூறினர். இதையடுத்து ஆலை நிர்வாகம் சார்பில் பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்து சர்க்கரை ஆலையில் இருந்த ஏராளமான பாம்புகளை பிடித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சென்னை வனஉயிரின காப்பாளர் கீதாஞ்சலி உத்தரவின் பேரில் கிண்டி வனச்சரகர் முருகேசன் தலைமையில் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு சென்று நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அங்கு பிடிக்கப்பட்ட நல்ல பாம்பு, சாரை பாம்பு, கண்ணாடி விரியன், தண்ணீர் பாம்பு என 360 பாம்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதில் 4 மண்ணுளி பாம்பு குட்டிகளும் அடங்கும்.

இதையடுத்து அந்த பாம்புகளை பிடித்ததாக சிவகங்கை மானாமதுரையைச் சேர்ந்த கண்ணன் (வயது 50), பாண்டி (29), லட்சுமணன் (56), முருகன் (20), அமாவாசை (55), பரமக்குடியைச் சேர்ந்த முருகன் (45), கண்ணன் (34), திருச்செந்தூர் ஆறுமுகநேரியைச் சேர்ந்த கண்ணன் (48) ஆகிய 8 பேரை கிண்டி வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி கிண்டி வனத்துறை சரகர் முருகேசன் நிருபர்களிடம் கூறும்போது, “பாம்புகள் இருப்பது பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தற்போது வனக்காப்பாளர் உத்தரவின் பேரில் 8 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். பிடிபட்ட பாம்புகள் அடர்ந்த காடுகளில் கொண்டு சென்று விடப்படும்” என்றார்.

Similar News