செய்திகள்

காஞ்சீபுரம் அருகே பாலத்தில் இருந்து அரசு பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி

Published On 2016-07-25 10:31 IST   |   Update On 2016-07-25 10:31:00 IST
காஞ்சீபுரம் அருகே பாலத்தில் இருந்து அரசு பஸ் கவிழ்ந்து 2 பேர் பலியான சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் (எண். 79) புறப்பட்டு சென்றது. டிரைவர் மோகன்தாஸ் பஸ்சை ஓட்டினார். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இரவு 11 மணியளவில் பஸ் வாலாஜாபாத்தை அடுத்த தேவரியம்பாக்கம் - தளழம்பட்டு இடையே சென்று கொண்டு இருந்தது.

அங்குள்ள கால்வாய் பாலத்தில் பஸ் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் தடுப்பு சுவரை உடைத்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் இருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த பாக்யமலர் (வயது30) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சென்னையைச் சேர்ந்த ரவிக்குமார் (49), டிரைவர் மோகன்தாஸ் உள்பட 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்த அனைவரும் செங்கல்பட்டு, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் பரிதாபமாக இறந்தார். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News