செய்திகள்

பெருந்துறை அருகே விபத்து: தடுப்புச்சுவர் மீது கார் மோதி டிரைவர் நசுங்கி பலி

Published On 2016-07-22 16:22 IST   |   Update On 2016-07-22 17:07:00 IST
பெருந்துறை அருகே தடுப்புச்சுவர் மீது கார் மோதி டிரைவர் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெருந்துறை:

திண்டுக்கல்லில் உள்ள எல்.ஜி.பி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் ஆரோக்கியம் (வயது 46). இவர் இயற்கை உணவுகளை விற்பனை செய்து வருகிறார். இவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று இயற்கை உணவுகைளை விற்பனை செய்து வருவார்.

நேற்று பீட்டர் ஆரோக்கியம் வேலை விசியமாக சேலம் வந்தார். அங்கு வியாபாரத்தை முடித்து விட்டு காரில் கோவைக்கு புறப்பட்டார். இந்த காரை சேலம் உமையாள்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (37) என்பவர் ஓட்டி சென்றார். இவர்கள் சென்ற கார் பெருந்துறை சரளை சண்முகபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது முன்னால் சென்ற ஒரு வாகனம் திடீர் என்று பிரேக் போட்டு நின்றது. அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ராஜேந்திரன் காரை வேகமாக திருப்பினார். இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த வியாபாரி பீட்டர் ஆரோக்கி யம் படுகாயம் அடைந்தார். அவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News