செய்திகள்

கோபி அருகே தோட்டத்தில் புகுந்தது சிறுத்தை அல்ல, பீதி அடைய வேண்டாம்: வனத்துறையினர் அறிவிப்பு

Published On 2016-07-20 17:46 IST   |   Update On 2016-07-20 17:46:00 IST
கோபி அருகே தோட்டத்தில் புகுந்தது சிறுத்தை அல்ல என்றும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.
கோபி:

கோபி அருகே உள்ள தாழகொம்பு புதூரை சேர்ந்தவர் சின்னு இவரது தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த சின்னான் (52) என்பவர் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது “தோட்டத்தில் ஒரு சிறுத்தை புலி பாய்ந்து சென்றதை நான் பார்த்தேன்” என்றும் அந்த சிறுத்தை ஒரு மயிலை விரட்டி சென்றது என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார்.

ஏற்கனவே இதே பகுதியில் ஒரு தோட்டத்துக்குள் மர்மவிலங்கு புகுந்திருந்தது. இந்த நிலையில் சிறுத்தையை பார்த்தேன் என்று தொழிலாளி சின்னான் புதிய குண்டை போட்டதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அத்தாணி வனவர் பழனிசாமி வனக்காவலர் பார்த்திபன் வன ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கரும்பு தோட்டத்தில் பதிவாகி இருந்த கால் தடத்தை பார்வையிட்டு பரிசோதித்தனர்.

பிறகு வனத்துறையினர் கூறும்போது, “பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். தோட்டத்தில் பதிவாகி உள்ள கால் தடம் சிறுத்தை கால் தடம் அல்ல காட்டுப் பூனையின் தடம் ஆகும். இதுதான் மயிலை விரட்டிச் சென்றுள்ளது” என்று கூறினர்.

வனத்துறையினர் சிறுத்தை அல்ல என்று கூறியிருப்பது பொதுமக்களின் பயத்தை போக்கி உள்ளது.

எனினும் அப்பகுதியில் அத்தாணி வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News