செய்திகள்

நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் தொழிலாளி கொலை: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் கைது

Published On 2016-07-18 13:02 IST   |   Update On 2016-07-18 13:04:00 IST
செங்கல்பட்டு அருகே நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் தொழிலாளியை கொலை செய்த என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அருகே உள்ள  ஆத்தூர், குப்பம் சாலையில் உள்ள ஏரியில் கடந்த மாதம் 26-ந் தேதி  சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியாமல் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை  நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து கொலையுண்ட வாலிபரின் புகைப்படத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஒரு மாதத்திற்கு பின்னர் தற்போது கொலையுண்டது காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூர், சமத்துவபுரத்தை  சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன்(எ) ராமச்சந்திரன் என்பது தெரிந்தது.

புகைப்படத்தை வைத்து அவரது மனைவி டில்லிராணி அடையாளம் காட்டினார். போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டனை அவரது நண்பர்களே கள்ளக்காதல்  தகராறில் தீர்த்து கட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து மதுராந்தகத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் எழிலரசன், பி.ஏ படித்து வரும் காமேஷ் மற்றும் தேவேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்கள் போலீசாரிடம் கூறும் போது " நண்பர் ஒருவரது மனைவியுடன் மணிகண்டன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதனை நாங்கள் கண்டித்தும் கேட்க வில்லை. எனவே அவனை கழுத்தை நெரித்து கொன்று ஏரியில் வீசினோம்'' என்றனர். இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான  மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News