செய்திகள்

தாம்பரத்தில் மூடப்பட்ட காப்பகத்தில் 11 சிறுவர்கள் கடத்தலா?

Published On 2016-07-04 14:28 IST   |   Update On 2016-07-04 14:28:00 IST
தாம்பரம் காப்பகத்தில் சிறுவர், சிறுமிகளும் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று வெளியான தகவலையடுத்து சிறுவர், சிறுமிகள் யாரும் கடத்தப்படவில்லை என்றும், அவர்கள் குடும்பத்தினருடன் பத்திரமாக உள்ளனர் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
தாம்பரம்:

மேற்கு தாம்பரம், சி.டி.ஓ. காலனியில் “உதவும் உள்ளம்” என்ற பெயரில் தனியார் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு முறைகேடு நடப்பதாக மாவட்ட கலெக்டர் கஜலட்சுமிக்கு புகார்கள் வந்தன.

கலெக்டரின் உத்தரவுப்படி கடந்த 28-ந்தேதி மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தினர் காப்பகத்தில் சோதனை நடத்தினர். அப்போது முறையான பராமரிப்பு இல்லாமலும் உரிமம் பெறாமலும் காப்பகம் செயல்பட்டு வந்தது தெரிந்தது.

இதையடுத்து கடந்த 30-ந்தேதி காப்பகத்தை மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கிருந்த 32 சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் அங்கீகாரம் பெற்ற காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் நல குழுமம் சார்பில் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது.

அதில், மூடப்பட்ட காப்பகத்தின் பதிவு ஆவணங்களில் 41 சிறுவர், சிறுமிகள் இருந்ததாக உள்ளது. ஆனால் 32 பேர் மட்டும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். 9 சிறுவர், சிறுமிகள் மாயமாகி உள்ளனர். மேலும் 2 சிறுமிகள் ஆள் மாறாட்டம் செய்து ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இது குறித்து உரிய விசாரணை நடத்தி காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. புகாரை பெற்றுக் கொண்டதற்கான ரசீதை (சி.எஸ்.ஆர்.) மட்டும் கொடுத்து இருக்கிறார்கள்.

இதற்கிடையே காப்பகத்தில் இருந்த 11 சிறுவர், சிறுமிகளும் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி தாம்பரம் போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, “காப்பகத்தில் இருந்த சிறுவர், சிறுமிகள் யாரும் கடத்தப்படவில்லை. அங்கிருந்த சிறுவர்களின் வீட்டு முகவரியை பெற்று வீடு, வீடாக ஆய்வு செய்தோம். அவர்கள் குடும்பத்தினருடன் பத்திரமாக உள்ளனர்.

குழந்தைகள் நல குழு மத்தினர் அவர்களை ஒப்படைக்க சொன்னால் அழைத்து வந்து காட்ட தயாராக உள்ளோம். இதே போல் 2 சிறுமிகள் ஆள் மாறாட்டம் செய்து ஒப்படைக்கப்படவில்லை” என்றார்.

Similar News