செய்திகள்

நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி: 2 கல்லூரி மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2016-06-29 15:59 IST   |   Update On 2016-06-29 15:59:00 IST
ஈரோடு மாவட்டம் நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பலியானதற்கு காரணமான வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 2 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
கோபி:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்தவர் பிரகாசம் (வயது 54). வெள்ளி திருப்பூரில் தனது மைத்துனர் இறந்த சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 25-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றார். பிறகு அங்கிருந்து பணிக்கு நம்பியூர் போலீஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

இவர் கோபி அருகே அத்தாணி ரோட்டில் கருங்கரடு என்ற இடத்தில் ஒருவளைவில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மூளை சிதறி பலியானார்.

இந்த விபத்து தொடர்பாக கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் விபத்து நடந்த அத்தாணி ரோட்டில் உள்ள வீடுகள் மற்றும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதிய வாகனம் பற்றி துப்பு துலக்கி வந்தனர்.

அப்போது விபத்து நடந்த சமயத்தில் அத்தாணியில் இருந்து கோபிக்கு செங்கல் ஏற்றி சென்ற ஒரு லாரியின் டிரைவர் விபத்து நடந்த சமயத்தில் எட்டிப் பார்த்து உள்ளார். இதை கண்டு உஷாரான தனிப்படை போலீசார் அந்த லாரி டிரைவரை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் விபத்து நடந்த விபரத்தை கூறும் போது:-

விபத்து நடந்த சமயத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மோட்டார் சைக்கிளில் வந்தபோது 9 மோட்டார் சைக்கிள்களில் கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் வேகமாக சென்று உள்ளனர்.

அப்போது அத்தாணி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் அருண் பிரனேவ் முதலில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளார்.

அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதில் நிலை தடுமாறிய சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் ரோட்டில் விழுந்த போது பின்னால் கோவை பீளமேட்டை சேர்ந்த கவுதம் சித்தா என்ற மாணவன் வந்த மோட்டார் சைக்கிள் சப்-இன்ஸ்பெக்டர் தலை மீது ஏறி சென்று உள்ளது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பலியாகி உள்ளார்.

மேற்கண்ட தகவலை அந்த லாரி டிரைவர் தான் பார்த்ததை போலீசில் வாக்குமூலமாக கொடுத்து உள்ளார்.

இந்த வழக்கில் திறமையாக விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட அருண் பிரனேவ், மற்றும் கவுதம் சித்தா ஆகிய 2 மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News