செய்திகள்

இளங்கோவன் ராஜினாமா: ஈரோடு மாவட்ட சிறுபான்மை காங். கூண்டோடு விலக முடிவு

Published On 2016-06-29 15:55 IST   |   Update On 2016-06-29 15:55:00 IST
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமாவை தொடர்ந்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறையினர் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு:

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்க கூடாது. அவர் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக சிறுபான்மை துறை தலைவர் அஸ்ஸாம் பாஷாவுக்கு ஈரோடு மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் சுரேஷ், துணை தலைவர்கள் பாட்சா, அர்சத் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் ஒரு மனு அனுப்பி உள்ளனர்.

அதில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதே தனது குறிக்கோளாக கொண்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செயலாற்றி வந்தார். தலைவர் பதவியில் நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து இது நாள் வரை அவர் முழு நேரமும் தனது உடல் நிலையை பற்றி கூட கவலைப்படாமல் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தும், ராகுல் காந்தியை தமிழகத்துக்கு அழைத்து வந்தும் பிரமாண்டமான பொதுக்கூட்டங்கள் நடத்தி உள்ளார்.

மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இளங்கோவன் இருந்து வந்தார்.

கட்சிக்கு நெருக்கடியான நேரத்தில் இவர் கட்சிக்கு தேவைப்படுவார். இவர் தலைவராக இருந்த போது த.மா.காவை காங்கிரசில் இணைய வைத்தார். பிறகு மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்ட போது, இந்த இக்கட்டில் இருந்து காங்கிரசை காப்பாற்ற இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நீடித்தால் கட்சி மேலும் பலம் பெற்று உயிரோட்டமாக இருக்கும் .எனவே இளங்கோவன் ராஜினாமாவை ஏற்காமல் அவரை தொடர்ந்து கட்சி பதவியில் நீடிக்க கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறையினர் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News