செய்திகள்

நீர் பிடிப்பு பகுதியில் கனமழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Published On 2016-06-29 11:29 IST   |   Update On 2016-06-29 11:29:00 IST
நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 43 அடியை தாண்டியது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இதில் 15 அடி சேறும்-சகதியும் கொண்டது. 105 அடிக்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் அடியோடு சரிந்தது. 29 அடிக்கும் கீழ் நீர்மட்டம் சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணை நிரம்ப வேண்டி பவானிசாகர் அணை பகுதியிலேயே யாகவேள்வியும் நடந்தது.

இந்தநிலையில் நீர்பிடிப்பு பகுதியில் குளிர் காற்று வீசி மழை பெய்ய தொடங்கியது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமானது.

படிப்படியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து 40 அடியை தொட்டது. கடந்த 2 நாட்களாக ஊட்டிமலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு 1740 கன அடி வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 43 அடியை தாண்டி 43.24 அடியாக இருந்தது.

நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலையில் இன்றும் கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும்.

இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணையின் மேல்பகுதியில் நடந்த யாக வழிபாட்டால் தற்போது மழை பெய்து அணைக்கு கூடுதல் தண்ணீர் வருகிறது என ஆன்மீகவாதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Similar News