செய்திகள்

மணப்பாக்கத்தில் சொகுசு கார்கள் திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

Published On 2016-06-21 08:03 IST   |   Update On 2016-06-21 08:04:00 IST
மணப்பாக்கத்தில் சொகுசு கார்கள் திருடிய வழக்கில் முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வசிக்கும் ரிவர்வியூ காலனி-டாக்டர் அம்பேத்கர் நகர் லிங்க சாலையில் தனியார் கார் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கு உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட புதிய கார்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த கிடங்கில் வேளச்சேரியை சேர்ந்த மனோகரன் (வயது 54) காவலாளியாக இருந்தார்.

கடந்த 9-ந் தேதி அதிகாலை 10 பேர் கொண்ட கும்பல் மனோகரனை தாக்கி கட்டிப்போட்டு 7 புதிய சொகுசு கார்களை எடுத்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் கல்யாண் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ரவிசேகரன், இன்ஸ்பெக்டர்கள் அருள்சந்தோசமுத்து, அருணாச்சலராஜா அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர் தீவிர சோதனையில் வளசரவாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 புதிய சொகுசு கார்களையும், மதுரவாயல் பகுதியில் இருந்து ஒரு காரும், கோடம்பாக்கத்தில் ஒரு காரும் என 7 கார்களும் மீட்கப்பட்டன. மேலும் இந்த வழக்கில் போலீசார் தேடும் டிராவல்ஸ் அதிபர்கள் தலைமறைவாகினர்.

சொகுசு கார்களுக்கு போலியான எண்கள் ஒட்டி தந்த ராமாபுரத்தை சேர்ந்த விஜயன் (25), அதற்கு உடந்தையாக இருந்ததாக விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24), மற்றொரு மணிகண்டன் (25), குன்றத்தூர் வினோத் (27), ராமாபுரம் ராஜா (25), கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த அருண்குமார் (25), நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (27) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த ரமேசை (30) போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News